Tuesday 25 November 2014


ஏற்றுமதியாகும் "முருங்கை விதை'

 
 

பதிவு செய்த நாள்

26நவ
2014 
00:00
முள் முருங்கை, முள்ளில்லா முருங்கை, ஒட்டுரக முருங்கை, நாட்டு முருங்கை என முருங்கையில் பல வகைகள் உண்டு. அனைத்து ரகத்திலும் இரும்பு சத்து பொதிந்து கிடக்கிறது. அனைவரும் விரும்பி உண்ணும் காய்கறிகளில் முருங்கைக்கு தனி இடம் உண்டு. முருங்கை கீரையில் அவியல் மற்றும் பொறியல், முள்முருங்கையில் கேழ்வரகு, பச்சரிசி கலவையில் ரொட்டி, வடை தட்டி சாப்பிடுவோர் ஏராளம். அதன் சுவையே தனி தான். நம்மவர்கள் முருங்கையை பல விதமாக சமைத்து ருசித்து வருகின்றனர்.

முருங்கையின் மருத்துவ மகிமை: வெளிநாட்டினர் முருங்கையின் சத்துக்களை தனியாக பிரித்து மருந்தாகவும், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் பெருமளவு பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் இருந்து முருங்கை விதைகளை சேகரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய விவசாயிகள் நேரடியாகவும், மறைமுகமாவும் உதவுகின்றனர். இந்த வரிசையில் விவசாயிகளின் நண்பனாக மதுரையை சேர்ந்த விவசாயி ஜெயக்குமார் உள்ளார். முருங்கை விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து விளைவிக்க செய்கிறார். கீரைகள், முருங்கைக்காய்களை விவசாயிகளிடமே கொடுத்து விடுகிறார். முற்றிய முருங்கையின் விதைகளை விலை கொடுத்து வாங்குகிறார்.
மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டி சமத்துவபுரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக முருங்கை விதைகளை தரம் பிரிக்கும் பணியை ஜெயக்குமார் வழங்கி வருகிறார். இதன் மூலம் பெண் ஒருவர் பகுதி நேரமாக வேலை பார்த்தால் கூட நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.150 சம்பளமாக கிடைக்கிறது.
ஜெயக்குமார் கூறுகையில், ""முருங்கை எனது பிரதான விவசாயம். மதுரை, தேனி, ஆண்டிபட்டி, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மூலம் முருங்கையை பயிரிட செய்கிறேன். விதைகளை விலை கொடுத்து வாங்குகிறேன். அவற்றை காய வைத்து, சுத்தம் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மும்பை ஏஜன்ட்களுக்கு அனுப்புகிறேன். ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.320 வரை விலை போகும். விதைகள் மருந்தாகவும், அழகு பொருள் தயாரிப்பிலும் பயன்படுத்துகின்றனர். முருங்கையை நம்பி விவசாயம் செய்யலாம். அதிக லாபம் கிடைக்கும்,'' என்றார். தொடர்புக்கு 99523 80304
கா.சுப்பிரமணியன், 
மதுரை.

Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22863&ncat=7

No comments:

Post a Comment