Wednesday 28 January 2015

சின்ன சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள்

28ஜன
2015 
00:00
கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்கு: தாது உப்புக்களின் பங்கு முக்கியம். கால்நடைகளின் உடலமைப்பு 3 முதல் 5 சதவிகிதம் தாது உப்புக்களினால் ஆனது. கால்நடை தீவனத்தில் தாது உப்புக்கள் மிகக்குறைந்த அளவே தேவைப்பட்டாலும் அவற்றின் குறைபாடுகள் இனப்பெருக்க செயல்களைப் பாதிக்கிறது. பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீசு, அயோடின் செலீனியம் தாது உப்பு வைட்டமின் சத்துடன் சேர்ந்து இனப்பெருக்கத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. கருத்தங்காமை, பிறந்த குட்டிகளில் இறப்பு, குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. செலீனியம் தாது உப்பு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட கறவை மாடுகளில் கருச்சிதைவு, நஞ்சுக்கொடி தங்குதல், சூலகக்கட்டிகள் கருப்பை அழற்சி போன்ற நோய்களின் நிகழ்வுகள் குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு தீவனம் மூலம் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க குடற்புழு நீக்கம் உரிய இடைவெளியில் செய்வது மிகவும் அவசியம். போதிய அளவு சுத்தமான குடிநீர், எந்நேரமும் கால்நடைகளுக்கு கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் தாது உப்பு கலவை அடங்கிய அடர்தீவனம் அளிக்க வேண்டும். தகவல் : முனைவர். ரா.ராஜ்குமார், கால்நடைப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருவண்ணாமலை - 600 601.

கன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை: கன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும். அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும். வைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம். மூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும்.
பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும். கத்திரித்த இடத்தில் உடனே "டிஞ்சர்' அயோடின் தடவி விட வேண்டும்.

சீம்பால்: பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் "இம்முனோ கிளாபுலின்' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன. பொதுவாக கன்றுக்குட்டிக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும்.
கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில் நோய் உண்டாகலாம். அப்போது இதர பசுக்களின் சீம்பால் அளிக்கலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட பொருட்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்கலாம். முட்டை 1 (55 - 60 கிராம்), தண்ணீர் 300லி, விளக்கெண்ணெய் 12 தேக்கரண்டி, பால்500மிலி.
தகவல்: வெ.மீனலோசனி, இரா.அன்னல்வில்லி, இரா.ஜோதிப்ரியா, கால்நடைப்பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி635 001.
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

No comments:

Post a Comment