Friday 13 March 2015

கோடை இறவை பருத்தி சாகுபடியாளர்களின் கவனத்திற்கு…

பதிவு செய்த நாள்

11மார்
2015 
00:00
கோடைப்பருவத்தில் பருத்தி சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் அதிக மகசூல் பெற கீழ்காணும் தொழில்நுட்பங்களை கடைபிடிக்கவும்.
சம வயதுள்ள இரகத்தை யாவரும் தேர்ந்தெடுத்து ஏக காலத்தில் (ஒரு வாரத்திற்குள்) விதைத்திட வேண்டும். இயன்றவரை பூச்சி நோய் தாங்கி வளரவல்ல எஸ்விபிஆர் 2 மற்றும் எஸ்விபிஆர் 4 இரகத்தைத் தேர்ந் தெடுத்து பயிரிட வேண்டும். சாணிப்பால் கொண்டு விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் விதைப்பதற்கு சற்று முன்பாக ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் சூடாமோனாஸ் புளரோசன்ஸ் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யும். காற்றடிக்கும் திசைக்கு குறுக்காக பார்கள் / வரிசைகள் அமைத்து விதைத்தால் மருந்தடிக்கும் போது மருந்துக்கலவை வீணாகாமல் தடுக்க உதவும்.
வயலைச் சுற்றிலும் உள்ள செடிகள், களைகளை (பூச்சிகளுக்கு மாற்றுணவாகப் பயன்படும்) அகற்றிச் சுத்தமாக வைக்க வேண்டும். ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவது பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் குறைக்கும். (வேரழுகல், வாடல், நூற்புழு, தண்டுக்கூன் வண்டு, தரைக்கூன் வண்டு, வேர்ப்புழு). விதைத்த 30வது நாளில் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் (ஏக்கருக்கு ஒரு கிலோ) இடுவது வேரழுகல், வாடல் நோய் தாக்குதலைக் குறைக்கும். நட்ட 20 மற்றும் 30ம் நாள் வேப்பெண்ணெய் 1 சதம் கரைசல் தூரில் ஊற்றுதல் தண்டுக்கூன், வண்டுத் தாக்குதலைக் குறைக்கும். ஊடுபயிராக வாய்க்கால்கள் மற்றும் பாத்தி வரப்புகளின் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்த்தால் பொறி வண்டுகள் பெருக்கத்திற்கு துணைபுரியும்.
மேலும் பூச்சியின் வருகையை கண்காணிக்க ஊடுபயிராக மக்காச்சோளம், உளுந்து மற்றும் சீனி அவரை (கொத்தவரை) ஓரப்பயிராக ஆமணக்கு, சூரியகாந்தி பயிரிட வேண்டும். இரட்டை வரிசையில் பருத்தியை பயிரிட்டு இடைவெளியில் ஒரு வரிசை உளுந்து மற்றும் சீனி அவரை (கொத்தவரை) ஊடுபயிராக பயிரிடலாம். உளுந்து ஊடுபயிராக பயிரிட்டால் தத்துப்பூச்சி தாக்குதல் குறையும். சீனி அவரை ஊடுபயிராக பயிரிட்டால் தத்துப்பூச்சி மற்றும் காய்ப்புழு தாக்குதல் குறையும். மேலும் இந்த பயறு வகை ஊடுபயிர்கள் மூலம் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து உற்பத்தி செய்யப்பட்டு மண்ணின் வளம் மேம்படுகிறது. வெண்டை, ஆமணக்கு மற்றும் சூரியகாந்தி பயிர்கள் முறையே புள்ளிக் காய்ப்புழு, புரடீனியா மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு தாக்குதலைக் கவர்ந்திழுக்கும். அப்பூச்சிகளை அங்கேயே கட்டுப்படுத்தி விட வேண்டும்.
ஊடுபயிராக வாய்க்கால்களில் மக்காச்சோளம் பயிரிட கிரைசோப்பா, குளவிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளின் பெருக்கத்திற்கு துணை செய்யும். வயலைச் சுற்றி அரண் போன்று சோளம் நெருக்கமாக (உயரமாக வளரும் ரகம்) வளர்க்க வேண்டும். (தத்துப்பூச்சி, இலைப்பேன்கள், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி மற்றும் காய்ப்புழுவின் அந்துகள் வயலினுள் நுழைவதைத் தடுக்க).
இவ்வாறு ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசி ரியர் மற்றும் தலைவர் முனைவர் ம.குணசேகரன் தெரிவிக்கிறார்.

Source: 

No comments:

Post a Comment