Wednesday 6 May 2015

உளுந்து சாகுபடி தொழில்நுட்பம்

பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் உளுந்து பயறு சாகுபடி செய்யும்போது தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
 இது தொடர்பாக அத்துறையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விதையின் அளவு: டி 9, கோ 5, வம்பன் 1, வம்பன்2, டிஎம்வி 1 ஆகிய ரகங்களை தேர்வு செய்தால் 20 கிலோ விதை போதுமானது. பயிர்களின் மொத்த எண்ணிக்கை ஹெக்டேருக்கு 3,25,000 ஆகும்.
நில மேம்பாடு: நில மேம்பாட்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழு உரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார்க் கழிவு 12.5 டன் இடவேண்டும். தனிப்பயிராகவும், கலப்புப் பயிராகவும் சாகுபடி செய்யலாம்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். இல்லையெனில் கார்பென்டாசிம் (அ) திரம் 2 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்கவும். பயனுள்ள ரைசோபியம் பாக்டீரியாக்களை பூசண மருந்து கலந்த விதையுடன் கலக்கக் கூடாது. டிரைக்கோடர்மா கலந்த விதையுடன் பயனுள்ள பாக்டீரியாக்களைக் கலந்து விதைக்கலாம்.
பாக்டீரியா ராசியுடன் விதைநேர்த்தி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் 
 சி ஆர்.யு -7 (ஹெக்டேருக்கு 600 கிராம்) மற்றும் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் 3 பாக்கெட் மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (ஹெக்டேருக்கு 2000 கிராம்) அல்லது 10 பாக்கெட் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி.கி தொழு உரம் மற்றும் 25 கி.கி.மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னதாக இடவேண்டும்.
விதைப்பு: விதைகளை 30-க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால், அறுவடைக்கு 5 முதல் 10 நாள் இருக்கும்போது விதைகளை மண்ணில் தூவவேண்டும். தூவும்போது மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். வரப்பு ஓரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.
உரமிடுதல்: விதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரிப் பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து 50 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் ஹெக்டேருக்கு 2 சதவீதம் டை அம்மோனியம் பாஸ்பேட்டை பூக்கும் தருணத்திலும், 15 நாள்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். மானாவாரி மற்றும் இறவைப் பயிர்களுக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் 2 சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும் பின்பு 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
 மணிச் சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை என்றால் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும். நடவு வயலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்உரக் கலவையை ஹெக்டேருக்கு 5 கிலோவை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். உளுந்தின் மகசூலை அதிகரிக்க 1 யூரியாவை இலைவழியாகத் தெளிக்க வேண்டும். 
 மகசூலை அதிகரிக்க வினையியல், உயிர் இயைபு வழி பண்புகள் இலைத் தெளிப்பாக விதைத்த 30 மற்றும் 45ஆவது நாளில் யூரியா 1 தெளிக்க வேண்டும்.
 உளுந்தில் வறட்சிக் காலத்தில் இடைப்பருவ மேலாண்மை முறையாக 2 பொட்டாசியம் குளோரைடு மற்றும் 100 பிபிஎம் போரான் தெளிக்க வேண்டும். ராபி பருவத்தில் பொட்டாசியம் குளோரைடு தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். உயிர் உரங்கள் மற்றும் துத்தநாகம், மாலிப்டினம் மற்றும் கோபால்ட் போன்ற நுண்ணூட்டச் சத்துகள் கொண்டு விதைக்கு மேல் பூச்சு செய்யலாம். 
 ஒரு கிலோ விதைக்கு 0.5 கிராம் பயன்படுத்த வேண்டும். 50 சதவிகித நைட்ரஜனுக்கு மாற்றாக உயிர்ம ஆதாரம் (ஏக்கருக்கு 850 கிலோ மண்புழு உரம்). பயறு வகை பயிர்களில் கார அமிலத் தன்மை 6.0க்கும் குறைவான மண்ணில் சுண்ணாம்பு அளிக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த் தண்ணீர் மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும். பயிரின் எல்லா நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.
இலைவழி நுண்ணூட்டம்: டிஏபி அல்லது யூரியா, என்ஏஏ மற்றும் சலிசலிக் அமிலக் கரைசல் தெளிக்கலாம். இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சாலிசலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும். நெல் தரிசு பயறுவகைப் பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
 மானாவாரி மற்றும் இறவைப் பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்கவேண்டும்
களை கட்டுப்பாடு: களை முளைப்பதற்கு முன் களைக் கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 3.3 லிட்டர், மழை நேரமாக இருந்தால் 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுண்குழல் கொண்ட பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பானில் ஒரு ஹெக்டேருக்கு 500 லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும். 20ஆவது நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும் அல்லது களை முளைத்த பின் தெளிக்கும் களைக் கொல்லியான குயிசல்பாப் இதைல் ஹெக்டருக்கு 50 கிராம் வீதம் விதைத்த 15 அல்லது 20 நாளில் தெளிக்க வேண்டும். 
 களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30வது நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும். பாசன உளுந்துக்கு களை முளைக்கும் முன் ஐசோ ப்ரோட்ரான் எக்டருக்கு 0.5 கிலோ அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து விதைத்த 30 ஆவது நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
 அறுவடை: முதிர்ந்த காய்களைப் பறித்து உலர்த்த வேண்டும். அறுவடை செய்யும்போது பயிர்களை வேரோடு பிடுங்க வேண்டும். இல்லையெனில் முழு தாவரத்தையும் வெட்டி எடுக்க வேண்டும். பின்னர், குவித்து வைத்து உலர்த்த வேண்டியது அவசியமானது.

No comments:

Post a Comment